19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகள் பங்கேற்கும் 19 வயதிற்குட்பட்ட வீரர்களான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான் வரும் 1ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றது. இந்த நிலையில் இன்று 2வது அரையறுதிப் போட்டி கின்ராரா ஓவல் அகடமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்கத்தில் ஓட்டக் குவிப்பில் மந்தமாக இருந்த இலங்கை அணி, 33.1 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதன்பிறகு இலங்கை அணியின் ஓட்டக் குவிப்பு சூடுப்பிடித்தது.
5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நிரோஷன், வீரக்கொடி ஜோடி 113 ஓட்டங்களை குவித்தது. சன்டன் வீரகொடி 75 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 73 ஓட்டங்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய நிரோஷன் டிக்வில்லா 8 பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை குவித்தது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாபா அபரஞ்சித் 10 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
245 ஓட்டங்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே பொறுப்பாக ஆடியது. இந்திய அணித்தலைவர் உன்முக்த் சந்த் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். 1 சிக்ஸ், 11 பவுண்டரிகள் விளாசிய உன்முக்த் சந்த் சதமடித்தார்.
அவருக்கு இடதுகை துடுப்பாட்ட வீரர் விஜய் சோல் ஒத்துழைப்பு கொடுத்து ஆடி அரைசதம் கடந்தார். இந்திய அணி வெற்றிப் பெற 6 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், உன்முக்த் சந்த் ஆட்டமிழந்தார்.
முடிவில் இந்திய அணி 47.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களை எடுத்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம் வரும் 1ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதிப் பெற்றது.
முன்னதாக லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 1 ஓட்டத்தில் தோல்வியை தழுவிய இந்தியா, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்த முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |