இந்தியா கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இலங்கையில் நாளை தொடங்க உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கவுதம் கம்பீர் 10 ஓட்டங்களும், வீரேந்திர ஷேவாக் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லியும், ரோகித் சர்மாவும் நிலைத்து நின்று ஆடினர்.
ரோகித் 56 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். கோஹ்லி ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 75 ஓட்டங்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 186 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணித்தலைவர் மொகமது ஹபிஸ் 38 ஓட்டங்களும், இம்ரான் நசிர் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்பு களமிறங்கி அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும், சொய்ப் மாலிக் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களும் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
பந்துவீச்சில் இந்திய சார்பாக அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.








|