எஸ்.எல்.பி.எல் என்று அழைக்கப்படும் ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் அணிகளுக்கான உரிமையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இதன்படி உரிமையாளர்களின் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த எவருமில்லை என்று தெரிகிறது.
7 அணிகளான வயம்ப, கந்துரட்ட, றுகுண, ஊவா, பஸ்னாஹிர, உத்துர, நகெனஹிர ஆகிய அணிகளுக்கான ஏல உரிமையில் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன.
இதில் அதிகபட்சத் தொகையான 5.02 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மஹேல ஜெயவர்தனவை அடிப்படையாகக் கொண்ட வயம்ப அணி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வணி இலங்கையின் உள்ளூர் டி20 தொடர்களில் தொடர்ந்தும் பிரகாசித்து வரும் அணி என்பது குறிப்பிடத்தக்கது. வயம்ப அணியை இந்தியாவைச் சேர்ந்த வாதவன் ஹோல்ட்டிங்க்ஸ் என்ற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.
அடுத்த அதிகபட்சத் தொகையான 4.98 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கந்துரட்ட அணி வாங்கப்பட்டுள்ளது. கந்துரட்ட அணியில் குமாரா சங்கக்காரா முக்கியமான வீரராகக் காணப்படுகிறார்.
தொடர்ந்து றுகுண அணி மற்றும் ஊவா அணி தலா 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், பஸ்னாகிர அணி 4.33 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், உத்துர அணி 3.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும், நகெனஹிர அணி ஆகக்குறைந்த தொகையான 3.22 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பஸ்னாஹிர அணியை இந்தியாவின் ரசிகர்களின் அமைப்பு ஒன்றே குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் டண்டி லிமிற்றட் என்ற இந்த அமைப்பு இந்தியக் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
எஸ்.எல்.பி.எல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி தொடங்கவுள்ளது. |