இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு பாதுகாப்பு குறைப்பாடு எதுவும் இல்லை என்று தொடருக்கான பொறுப்பாளர் உபிஹா நீல் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் ஒக்ரோபர் 7ம் திகதி வரை இலங்கையில் டி20 உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென் ஆப்ரிக்கா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இலங்கையில் உள்ள கண்டி, கொழும்பு, ஹம்பன்டோகா ஆகிய 3 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனதாக தகவல் வெளியானது.
இந்த ஆவணங்களை பாதுகாப்பு ஆலோசகர் ஷான் டுல்வா என்பவர் திருடியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. அதன்பின்பு ஷான் டுல்வா தொடரின் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஷான் டுல்வா, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள உபிஹா நீல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இது குறித்து உபிஹா கூறுகையில், இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. தொடர் நடத்துவதற்கு எதிராக மிரட்டல் எதுவும் வரவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றதைப் போல இந்த ஆண்டு இலங்கை அரசும் தகுந்த ஏற்பாடு செய்துள்ளது என்றும் டி20 தொடருக்கான ஆவணங்கள் எதுவும் தொலையவில்லை எனவும் தெரிவித்தார். |