இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபிஸ் இரட்டை சதத்தை தவற விட்டார்.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சின்ஹல்சே விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் மூலம் முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி கொள்ளும் முனைப்போடு துடுப்பெடுத்தாட தொடங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய தவ்பீக் 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரசன்ன ஜெயவர்த்தன பிடியில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான மொகமது ஹபிஸுடன், அசார் அலி இணை சேர்ந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர்.
பாகிஸ்தான் அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவருக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க வீரரான மொகமது ஹபிஸ் 18 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் கடந்து 172 ஓட்டங்களும், அசார் அலி 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது.
இரட்டை சதத்தை நோக்கி விளையாடிய மொகமது ஹபிஸ் 196 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
சதத்தை கடந்து 157 ஓட்டங்கள் எடுத்த அசார் அலி குலசேகராவின் பிடியில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய யூனிஸ் கான் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 29 ஓட்டங்களும், ஆசாத் ஷாபிக் 1 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.








|